நீராவி என்ஜினில் ரயில் ஓட்டிய பிறகும் நெருப்பு மூட்ட திணறிய மனிதன் தற்செயலாக 'தீக்குச்சி' கண்டுபிடித்த கதை

    • எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த 1826ஆம் ஆண்டில், எதிர்பாராத அல்லது ஒருவேளை கவனக்குறைவால் நிகழ்ந்த சம்பவத்தால் மனிதகுலம் பயனடைந்தது.

அதுதான் ஒளி மற்றும் வெப்பத்தை உருவாக்கும் முறையை மாற்றியமைத்த சம்பவம்.

ஆங்கிலேய மருந்தாளர் ஜான் வாக்கர் வெடிபொருட்களை உருவாக்கும் முயற்சியில் ரசாயனங்களைக் கலந்து கொண்டிருந்தபோது, அந்தக் கலவையால் பூசப்பட்ட ஒரு குச்சி தவறுதலாக அவரது நெருப்பிடத்தின் முன்பகுதியில் இருந்த கல்லில் உரசியது. உடனே அது தானாகவே தீப்பற்றி எரியத் தொடங்கியது.

வாக்கர் 1781ஆம் ஆண்டு டர்ஹாமிலுள்ள துறைமுக நகரமான ஸ்டாக்டன்-ஆன்-டீஸில் பிறந்தார்.

அது தொழிற்புரட்சியின் நடுப்பகுதி.

அதன் முக்கிய உந்து சக்தியாக இருந்த ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் 1776ஆம் ஆண்டில் வணிக ரீதியாக அறிமுகமானது. நீராவி இன்ஜின்களை பயன்படுத்திய முதல் பொது ரயில் பாதை 1825ஆம் ஆண்டு ஸ்டாக்டனை சென்றடைந்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜார்ஜ் ஸ்டீபன்சனின் 'ராக்கெட்' நீராவி இன்ஜின்களால் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிகள் ரயில்களை இழுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்தது.

அதன் பின்னர், குதிரை மூலம் செல்ல 12 நாட்கள் எடுத்த பயணங்களை வெறும் 8 மணிநேரத்தில் முடிக்க முடிந்தது.

ஆனால் இந்த சக்தியை உருவாக்கிய நெருப்பை மூட்டுவதற்காக, மக்கள் அப்போது வரை பிளிண்ட் மற்றும் எஃகை பயன்படுத்தி போராடிக் கொண்டிருந்தனர் அல்லது நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கச் செய்வதற்குக் கடுமையாக உழைத்தனர்.

வாக்கரின் தற்செயலான கண்டுபிடிப்பு, நெருப்பை உருவாக்கும் முறை, அதன் பயன்பாடு மற்றும் எடுத்துச் செல்லும் வசதி ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் வரை அந்த நிலை தொடர்ந்தது.

பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான வாக்கர், 18ஆம் நூற்றாண்டின் ரத்தம் கசியும் அறுவை சிகிச்சை அறைகளின் தன்மையால் வெறுப்படைந்து, பின்னர் "மருந்து விற்பனையாளர்" ஆக பயிற்சி பெற்றார்.

1826ஆம் ஆண்டுக்குள், அவர் தனது பெரும்பாலான நேரத்தை மனிதர்களுக்காக மட்டுமல்லாமல் குதிரைகள், மாடுகள் மற்றும் கோழிகளுக்குக் கூட மருந்துகள் தயாரிப்பதில் செலவிட்டார் என்று 'நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்த ஒரு கதை: நார்த் ஆஃப் இங்கிலாந்து மேட்ச் கோ., வெஸ்ட் ஹார்ட்லிபூல்' (A Tale of Hope and Despair: North of England Match Co West Hartlepool )1932-1954 என்ற நூலின் ஆசிரியர் ஆலன் மிடில்டன் கூறுகிறார்.

ஆனால் முக்கியமாக, வாக்கர் ரசாயன பரிசோதனைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

"வாக்கர் புத்திசாலி மற்றும் மிகவும் கருணை மிக்க மனிதர். சிலர் அவரை வித்தியாசமான சிந்தனையாளர் என்றும் கூறுகின்றனர்" என்கிறார் மிடில்டன்.

"ரசாயனவியல் அவரது ஆர்வங்களில் ஒன்றாக இருந்தது. தனது விவசாய நண்பர்களுக்காக துப்பாக்கி வெடிக்க உதவும் பெர்கஷன் காப்புகளை உருவாக்க ரசாயனங்களை அவர் கலந்தார்.

"ஒருநாள் அவர் ஒரு குறிப்பிட்ட கலவையைத் தயாரித்து உலர வைத்தார். அது உலர்ந்த பிறகு, அந்த மரத்துண்டை அடுப்பின் அருகே உரசியபோது அது தீப்பற்றி எரிந்தது. உலகில் இதற்கு முன் யாரும் செய்யாத அசாதாரணமான தருணம் அது."

"அதன் வணிக வாய்ப்புகளை அவர் உடனே உணர்ந்தார். இந்தச் சம்பவம் 1826ஆம் ஆண்டில் நடந்தது. சரியான தேதி எங்களுக்குத் தெரியாது. ஆனால் முதல் விற்பனை 1827 ஏப்ரலில் நடைபெற்றது."

"அவர் அவற்றை 'ஃபிரிக்ஷன் மேட்ச்கள்' என்று அழைத்தார். தொடக்கத்தில் அவை ஒரு டின்னில் நூற்றுக்கணக்கில் விற்கப்பட்டன."

வாக்கரின் "ஃபிரிக்ஷன் லைட்ஸ்" என்பது மிகவும் மெல்லிய தட்டையான மரக்குச்சிகள். அதன் ஒரு முனை பொட்டாசியம் குளோரேட், ஆன்டிமனி சல்பைடு, கம் அரேபிக் மற்றும் தண்ணீர் கலந்த பேஸ்டில் நனைக்கப்பட்டிருந்தது.

மடிக்கப்பட்ட மணற்காகிதத்தில் அதை உரசும்போது, அந்தத் தீக்குச்சி உடனே தீப்பற்றி எரிந்தது.

வாக்கர் தனது கலவை முறையை ரகசியமாக வைத்திருந்தார். ஆனால் அதற்காக அவர் ஒருபோதும் காப்புரிமை பெறவில்லை. அவரது தயாரிப்பு மலிவானதாக இருந்தது. ஸ்டாக்டன் பகுதியில் இருந்த தேவையை அவரால் பூர்த்தி செய்ய முடிந்தது.

ஆனால் ஃபார்மசூட்டிகல் ஜர்னலின்படி, "வாக்கரின் தீக்குச்சிகள் முழுமையானவை அல்ல. எரியும் கந்தகப் பூச்சு சில நேரங்களில் குச்சியில் இருந்து கீழே விழுந்துவிடும். இதனால் தரை அல்லது பயன்படுத்துபவரின் உடைகள் சேதமடையும் அபாயம் இருந்தது."

கடந்த 1829ஆம் ஆண்டுக்குள், லண்டனை சேர்ந்த சாமுவேல் ஜோன்ஸ் தனது சொந்த "லூசிபர்கள்" என்ற தீக்குச்சிகளை அறிமுகப்படுத்தினார். அவை வாக்கரின் "ஃபிரிக்ஷன் லைட்ஸ்" தீக்குச்சிகளின் அச்சு அசலான நகலாக இருந்தன. பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தீக்குச்சிகளாக அவை அமைந்தன.

அதன் பின்னர், மற்றவர்களும் அந்தக் கலவை முறையை மேம்படுத்தத் தொடங்கினர் என்று பிரிட்டிஷ் மேட்ச்பாக்ஸ் லேபிள் மற்றும் புக்மேட்ச் சொசைட்டி (BML&BS) என்ற அமைப்பின் தலைவர் டெரெக் ஜட் பிபிசியிடம் கூறுகிறார்.

தீக்குச்சி டின்களின் அளவும் வடிவமும் பல மாற்றங்களைக் கண்டன. ஆனால் 1844ஆம் ஆண்டில் ஸ்வீடனில் உருவாக்கப்பட்ட வடிவம்தான் நவீன தீக்குச்சி பெட்டியைப் பிரபலப்படுத்தியது.

"அதுதான் உண்மையில் காப்புரிமை பெற்ற முதல் தீப்பெட்டி" என்று ஜட் கூறுகிறார்.

பல பகுதிகளில், தீக்குச்சி தயாரிப்பு ஒரு குடிசைத் தொழிலாக மாறியது. வீடுகளிலேயே அவை தயாரிக்கப்பட்டதால், குடும்பங்களுக்கு அது ஓரளவு கூடுதல் வருமானமாக இருந்தது.

"தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த பெண்களும் குழந்தைகளும், தாங்கள் தயாரிக்கும் அளவுக்கேற்ப கூலி பெறும் முறையில் பெட்டிகளைத் தயாரித்தனர்" என்று கூறும் ஜட், "பின்னர் இயந்திரங்கள் வந்தன. அதன் பின் அது பல மில்லியன் டாலர் மதிப்புள்ள தொழிலாக மாறியது" என்று குறிப்பிட்டார்.

ஆனால் பின்னர் சிகரெட் லைட்டர் என்ற மற்றொரு கண்டுபிடிப்பு உருவானதால், இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது.

"காலப்போக்கில் இந்தத் தொழில் சுருங்கிக் கொண்டே வருகிறது. நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன" என்கிறார் ஜட்.

இருப்பினும், தீக்குச்சிகள் இன்னும் உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி, இப்போது ஒரு ஃபேஷன் பொருளாகவும் மாறிவிட்டதாக மிடில்டன் கூறுகிறார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தீக்குச்சிப் பெட்டிகள் 250 டாலர் வரை விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அதைக் கண்டுபிடித்தது யார் என்பது குறித்து பெரிதாகத் தெரியவில்லை. 200 ஆண்டுகள் கடந்த பிறகாவது வாக்கருக்கு அதிகமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று மிடில்டனும் ஜட்டும் ஒப்புக்கொள்கிறார்கள்.

"வாக்கர் தனது கண்டுபிடிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பாத வரலாற்று நபராக இருந்தார்" என்று கூறும் ஜட், "அவர் அப்படிச் செய்திருந்தால், மிகவும் பிரபலமானவராக மாறியிருப்பார்" என்கிறார்.

நல்லவேளையாக, ஸ்டாக்டன் மக்களும் இதே எண்ணத்தைக் கொண்டுள்ளனர். மே 29ஆம் தேதி வாக்கரின் பிறந்த நாளில் தொடங்கும் 200ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள், இந்த அசாதாரண உள்ளூர் அறிவியலாளருக்கு அவர் பெற வேண்டிய அங்கீகாரத்தை இறுதியாக வழங்கும் என்று பலர் நம்புகின்றனர்.

"இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் நடைபெறும் நிகழ்வுகள் மூலம், இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் தீக்குச்சியை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கை மேலும் பலர் அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்" என்று கவுன்சில் தலைவர் லிசா எவன்ஸ் கூறுகிறார்.

"ஃபிரிக்ஷன் மேட்ச் கண்டுபிடிப்பு, மிகக் குறைந்த முயற்சியிலேயே உடனடியாகத் தீயை உருவாக்க முடியும் என்பதைக் கொண்டு வந்தது.

"தொழிற்சாலைகளிலும் வீடுகளிலும் உள்ள அன்றாடப் பணிகளை தீக்குச்சிகள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் மாற்றின. அவர் உருவாக்கிய அந்தச் சிறு தீப்பொறி இன்றும் மக்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு